குறிப்பு – இது தொடரல்ல நீளமான பதிவு
துருக்கி இஸ்தாம்புலில் நடக்கவிருக்கும் தங்க நகைகளின் 2011 கண்காட்சியை காண்பதற்கும், புதிய டிசைன்களை தேர்வு செய்வதற்கும் நான்கு தினங்கள் அலுவலக பணியாக நான் சென்றிருந்தேன்.
பலநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னோடு துபாயிலிருந்து எமிரேட்சில் இஸ்தாம்புலுக்கு பயணம் செய்தார்கள். பல இந்தியர்களும் அதில் இருந்தாலும் சில தமிழர்கள் தமிழில் பேசிய சப்தம் கேட்கவே எனக்குள் பரவசம், நான் தனிமைப்பட்ட உணர்வை அந்த தமிழர்களின் பேச்சு நீக்கியது. அவர்கள் யார்? என்ன ஏது என்ற விபரமோ, அறிமுகமோ செய்துக்கொள்ளவில்லை ஆனால் அவர்கள் உரையாடிய தமிழ் என்னை சந்தோசப்படுத்தியது, நம்பிக்கை ஊட்டியது ஆம் தாயோடு பயணிப்பதைப் போன்ற உணர்வைக் கொடுத்தது நமது தாய்மொழி.

விமானத்திலிருந்து இந்த பகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன் எமிரேட்சில் எந்த நாட்டுக்கு பயணம் செய்தாலும் தமிழ் படம் இரண்டு ஒளிபரப்புகிறார்கள் அட்டவணைப்படி இந்த மாதம் ஜக்குபாய், அசல் இரண்டு படங்களைப் பார்த்தேன்.
இதன் பிறகு ஹோட்டல் அறையிலிருந்து பதிவுசெய்கிறேன்.
என்னை அழைப்பதற்கு எங்கள் நட்புக் கம்பெனியின் ஊழியர் நண்பர் ஆர்தோ துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் வந்திருந்தார்.விமான நிலையத்தில் வெப்பத்தை உணர்ந்த நான் வெளியில் வந்ததும் குளிரை சுவாசித்தேன். ஆம் 17 டிகிரி இது சாதாரணம் என்கிறார்கள் துருக்கியர்கள் மைனஸ் எல்லாம் வருமாம்.

மாலை 6.00 மணிக்கு துருக்கி விமான நிலையத்திலிருந்து நான் தங்கப்போகும் வாவ் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். விமான நிலையத்திலிருந்து 10 நிமிடங்கள் தான் வாவ் ஹோட்டல் இதற்கு எதிர்புறம் தான் நகை கண்காட்சியின் அரங்கம் இருக்கிறது எளிதாக ஐந்து நிமிடத்தில் நடந்துவிடலாம்.
ஹோட்டலில் முன் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அதிகநேரம் எடுக்கவில்லை சில நிமிடங்களில் 17 வது மாடியின் அறை சாவியை தந்தார்கள்.

அறையின் ஜன்னல் வழியாக கிழக்கு பகுதி துருக்கியை காணமுடிந்தது சாலைகளில் வாகனங்கள் எந்தநேரமும் சென்றுக்கொண்டே இருந்தன சில தருணங்களில் வாகன நெரிசல் டிராபிக் இருந்தது.

இரவு 8.00 மணிக்கு அறையிலிருந்து ஹோட்டல் உணவகத்திற்கு வந்தேன் துருக்கி நாட்டு உணவுதான் வைத்திருந்தார்கள் சுவையாகதான் இருக்கும் ஆனால் சுவைப்பதற்கு பசி அவ்வளவாக இல்லை அருகில் சூப்பர் மார்கெட் இருக்கிறதா என்று வினவினேன்.நான் மறந்துபோன பல்பேஸ்ட் வாங்குவதற்கு.
நடக்கும் தூரத்தில் ஏதும் இல்லை சில மைல்கள் போகனும் மெட்ரோ இரயிலை உபயோகப்படுத்துங்களேன் என்றார்கள். Read the rest of this entry »