தனது கனவுப்படமான மருதநாயகம் படத்தை மீண்டும் எடுக்க இருப்பதாக நடிகர் கமலஹாசன் பேசியுள்ளார்.
இத்தனை நாள் தாமதத்திற்குப் பிராயசித்தமாக தனது ஆருயிர் நண்பரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த்தையும் அதில் பிரதான பாத்திரம் ஒன்றில் நடிக்க வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மும்பை இதழொன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தத் தகவலை கமல் அளித்துள்ளார்
மருத நாயகம் யூசுப்கான் என்பவர் மதுரையை ஆண்ட குறுநில மன்னர். அவருடைய வரலாற்றை படமாக எடுக்க கடந்த 15 வருடங்களுக்கு முன்பே கமலஹாசன் முயன்றார். பிரிட்டிஷ் அரசியே வந்து தொடங்கிவைத்த அப்படம் எடுக்கும் திட்டம் பின்னர் பொருளாதாரம் காரணமாகக் கிடப்பில் போடப்பட்டது. அன்றைக்கே படத்துக்கான முதலீடாக 50 கோடி ரூபாய்கள் தேவை என்று கமலஹாசன் கூறியிருந்தார்.
மீண்டும் தொடங்கப்பட உள்ள இப்படத்தில் “மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். . இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது.
ரஜினி கமலை சேர்த்து நடிக்க வைத்தால் சரிவருமா? என்று எல்லோரும் யோசித்துக்கொண்டேயிருக்கிறார்கள். சிலகாலமாக நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை என்றாலும் ஆரம்ப காலங்களில் நாங்கள் இருவரும் பத்துப் படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்திருக்கிறோம்.” என்ற கமல் “ரஜினி கமல் இணைந்து நடிப்பு” என்ற பூனைக்கு தானே மணி கட்ட முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எப்படியும் கமல்தான் மருதநாயகம் என்னும் கதாபாத்திரத்தில் நடிப்பார். அப்படியானால் ரஜினிக்கு அதைவிட முக்கியத்துவம் குறைவான வேடமாகத் தானிருக்கும். அதை ரஜினி ஏற்றுக்கொள்வாரா? நட்புக்காக ரஜினி ஏற்றுச் சம்மதித்தாலும் அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா ? என்பது இங்கே வினாக்குறியே.
Source : http://www.inneram.com/news/cinema-news/marutanayakamagainkamal-rajini-3114.html








