
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை பாடல்
182. ஒரு நாளைக்கு ஒரு தரம்
பல்லவி
ஒருநாளைக் கொருதரம்
ஒருநொடிப் பொழுதேனும்
உன்னைப் படைத்தவனை
எண்ணிச் சுகித்த துண்டோ? மனமே! (ஒரு)
அநுபல்லவி
திருநாளும், தேரும்என்று தேடி யலைந்தல்ல
சிந்தனை அலையாமல் தியானத்தில் நிறுத்தியே (ஒரு)
சரணங்கள்
விடியுமுன் விழித்தனை
வெளுக்குமுன் வீட்டை விட்டாய்
வெவ்வேறாம் இடத்துக்கு
வெளவால்போல் ஓட்டமிட்டாய்
உடலும் மனமும் சோர்ந்து
ஓய்ந்திட வீடுவந்தும்
உண்ணும் பொழுதுங்கூட
எண்ணம் நிலைப்பதில்லை. (ஒரு)
அரைக்காசுக் கானாலும்
ஒருநாள் முழுதுங்காப்பாய்
ஆயிரம் பேரையேனும்
அலுப்பின்றிப் போய்ப்பார்ப்பாய்
உரைப்பார் உரைகட்கெல்லாம்
உயர்ந்திடும் செல்வனை
உன்னுள் இருப்பவனை
எண்ணிட நேரமில்லை! (ஒரு)
சிலநாளைக் கதிகாரம்
செய்யும் ஒருவர்க்கஞ்சிச்
செய்யச்சொல் வதையெல்லாம்
செய்வாய்நீ பல்லைக்கெஞ்சி;
பலநாளும் ஜென்மமெல்லாம்
பாலிக்கும் அதிகாரி
பரமனை நினக்கவும்
ஒருகணம் உனக்கில்லை! (ஒரு)
‘நாளும் கிழமை’யென்று
நல்லவர் உரைத்தாலும்
‘நாளைக்கு ஆகட்டும்
வேலை அதிகம்’என்பாய்!
பாழும் பணத்தைத்தேடிப்
படும்பாடு கணக்கில்லை.
பகவானை எண்ணமட்டும்
அவகாசம் உனக்கில்லை! (ஒரு)
Source : http://library.senthamil.org/243.htm








