“ஊருக்கு போனவன் சங்கதி சாமிக்குத்தான் தெரியும்” என்றிருந்த காலகட்டத்தில், அதையும் தாண்டி சிந்தித்த கிரகம்பெல். “மிஸ்டர் வாட்சன் இங்கே வாருங்கள், நீங்கள் தேவைப்படுகிறீர்கள்” என்று தொலைவில் உள்ள தம் உதவியாளரை அழைத்தார் கம்பி வழியாக! ஆம் தொலைபேசியை கண்டுபிடித்ததாக அறியப்படும் அலெக்சாண்டர் கிரகாம் பெல் தம் உதவியாளர் வாட்சனுடன் பேசத்துவங்கிய அந்த முதல் வார்த்தையுடன் தொடங்கியது தொலைபேசித் தொழில்நுட்பம். இன்று உலக மக்கள் தொகையில் 67 % க்கும் மேற்பட்டோரை ஏறத்தாழ 460 கோடி மக்களை இணைத்துக்கொண்டே இருக்கிறது.
ஏறக்குறைய 135 ஆண்டுகளுக்கு முன்னர் கம்பிகள் வழியாக வெறுமனே குரலை மட்டும் அனுப்புவதற்காக உருவாக்கிய தொழில்நுட்பம்தான் இன்று எத்தனை மாற்றங்கள் கண்டுள்ளது!
கம்பிவழி, கம்பியில்லாமல் என்று தொலைத்தொடர்பு, சாட்டிலைட் தொடர்பு என்றும் வெகு தூர அழைப்பு என்பது மிகச் சாதரணமாகி இப்போது உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிக் கிடக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த பரிணாம வளர்ச்சியே இன்று நம் முன்னே பேசப்படும் 3G சேவையாகும். சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளிநாடுகளில் உபயோகத்திற்கு வந்துவிட்டாலும் நம் நாட்டில் வழக்கம் போலவே கூச்சல்,குழப்பம், அவைஒத்திவைப்பு என நம் சடங்கு சம்பிரதாயங்களையும் தாண்டி சந்தைக்கு வந்திருக்கிறது.
சிவப்புக் கம்பளம் விரிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது இந்த தொழில்நுட்பத்தில்???? பார்க்கலாம்.
‘என்னை விட என் பிள்ளை புத்திசாலி, என பிள்ளையை விட பேரப்பிள்ளை மிக புத்திசாலி’ என்று நாம் நம் தலைமுறைகளைப் போற்றிக்கொள்வது போலவே தொழில்நுட்பமும் தனது தலைமுறையினை பற்றி பெருமிதம் கொள்கிறது. 3G யும் அப்படித்தான். G என்ற ஆங்கிலச்சொல் Generation என்ற வார்த்தையின் முதல்எழுத்தேயாகும். அதாவது தொலைத்தொடர்பு – தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் மூன்றாம் தலைமுறையினை எட்டியுள்ளதை இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. Read the rest of this entry »