கோழி மோசடி
புளி போட்டு பளபளப்பாக துலக்கி வைக்கப்பட்டிருந்த வெங்கலச் சொம்பில் ‘புளிச்’சென்று துப்பினார் நாட்டாமை. அதே ஆலமரம். அதே ஜமுக்காளம். அதே பொதுமக்கள்.
“ஆளாளுக்கு மசமசன்னு நின்னுக்கிட்டிருந்தா எப்பூடி? யாராவது பேச்சைத் தொடங்கியாகணுமில்லே?” நாட்டாமைக்கு சரிசமமாக அமர்ந்திருந்த பச்சைத்துண்டு பெருசு ஆரம்பித்து வைத்தது. தனக்கு வாகாக அவ்வப்போது ‘பீப்பி’ ஊதும் இம்மாதிரி ஆட்களுக்குதான் சரியாசனம் வழங்குவது நாட்டாமையின் வழக்கம்.
“நம்ம மாடசாமிதான் பிராது கொடுத்திருக்காப்புலே” மேடையில் அமர்ந்திருந்த இன்னொரு பீப்பி, முந்தைய பீப்பியை வழிமொழிந்தது.
“அது ஒண்ணுமில்லேங்கய்யா… நம்ம ராசாவாலே எனக்கு ஒரு ஒண்ணே முக்கா லட்சம் நஷ்டமா போயிடிச்சிய்யா… அவனாண்ட பேசி வாங்கித் தருவியளோ, இல்லேன்னா கட்டிவெச்சி அடிச்சி வாங்கித் தருவியளோ தெரியாது. என் காசு ஒண்ணே முக்கா லட்ச ரூவாய் எனக்கு வோணும்”
“என்னப்பா ராசா. மாடசாமி சொல்றது உண்மையா?”
“இல்லீங்க. என்னாலே அவனுக்கு லாபம்தானுங்க”
“ஏம்பா. அவன் லாபம்னு சொல்றான். நீ நஷ்டமுன்னு சொல்றே. என்னதான்யா உங்க கொடுக்க வாங்க”
“அய்யா. என் கோழிப்பண்ணையையே அழிச்சிப் புட்டான்யா இந்த ராசா”
“இல்லீங்கய்யா. அவன் பொய் சொல்லுதான். என்னாலே மாடசாமிக்கு நாப்பது ரூவாய் லாபம்தானுங்கய்யா”
“யோவ். ரெண்டு பேருலே ஒருத்தனாவது புரியறாமாதிரி சொல்லித் தொலைங்கடா. வெயில் ஏறிக்கிட்டே போவுது. உடம்பெல்லாம் ஒரு மாதிரி கசகசக்குது பார்த்துக்க”
மாடசாமி சொல்ல ஆரம்பித்தான்.
“அய்யாவுக்கு தெரியாதது ஒண்ணுமில்லீங்க. நான் ஆசையா ஒரு பெட்டைக்கோழியை வளர்த்து வந்தேன். எனக்கு வயித்துக்கு இருக்குதோ இல்லையோ. அதுக்கு நல்லா சத்தா தீவனம் போட்டு வளர்த்தேனுங்க. இப்போ கொஞ்சம் பணமுடை. அதனாலே அதை விலைக்கு வித்துடலாமுன்னு முடிவு பண்ணேனுங்க. நம்ம ராசா வாராவாரம் சந்தைக்குப் போவாப்புலேன்னு சொல்லிட்டு, அவனாண்ட இதை வித்துக் கொடுக்குற பொறுப்பை ஒப்படைச்சேனுங்க. அதுலேதானுங்க என்னை இவன் ஏமாத்திப்புட்டான்”
“அந்த கோழியோட விலை நூத்தி பத்து ரூவாய்ங்க. நான் நூத்தி ஐம்பது ரூவாய்க்கு வித்துக் கொடுத்தேனுங்க. அவனுக்கு நாப்பது ரூவாய் லாபம்தானுங்களே?”
“அது எப்படிங்க அய்யா? இந்த கோழி நாலு முட்டை வெச்சுருக்கும். நாலு குஞ்சு பொறிச்சிருக்கும். நாலு பதினாறாயி, பதினாறு அறுவத்தி நாலு ஆயி, அறுவத்தி நாலு இருநூத்தி ஐம்பத்தாறாயி… இப்படியே ஒரு ரெண்டு வருஷத்துலே பண்ணை ஆகியிருக்குமுங்க.. ஊர்லே பண்ணை வெச்சிருக்கிறானே முனுசாமி. அவங்கிட்டே வெசாரிச்சி கேட்டுட்டுதானுங்க சொல்றேன். ஒரு பண்ணையோட மதிப்பு ஒண்ணே முக்கா லட்சமுங்க. அப்போ என் கோழியோட மதிப்பும் அதுதானுங்களே? இவன் பாட்டுக்கு நூத்தி ஐம்பது ரூவாயை கையில் கொடுத்துட்டு போனா என்னாங்க அர்த்தம்?”
“என் அறிவுக்கண்ணை தெறந்துட்டேய்யா..” நாட்டாமை புளங்காங்கிதப்பட்டதோடு ராசாவை நோக்கி, “ராசா நீ கோழியை யாராண்ட வித்தியோ, அந்த விற்பனையை கேன்சல் பண்ணி உடனே தீர்ப்பு கொடுக்கறேன். மரியாதையா கோழியை வாங்கி மாடசாமி கிட்டே கொடுத்துடு. அதுவுமில்லாமே ஒண்ணே முக்கா லட்ச ரூவாய் ஏமாத்தியிருக்கே. இந்த நாட்டாமையோட லெவலை தாண்டின குத்தமிது. மோசடி பண்ண குத்தத்துக்காக உன்னை இந்த பஞ்சாயத்து போலிஸிலே ஒப்படைக்குது. இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு!”
“அருமையான தீர்ப்புங்கய்யா…” ஊரே குலவையிட்டு நாட்டாமையை வாழ்த்தியது.
ராசா இப்போது ஜெயிலில் இருக்கிறார். மாடசாமி தன் கோழியை ஒண்ணே முக்கா லட்ச ரூபாய்க்கு விற்க ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.
எழுதியவர் யுவகிருஷ்ணா
Source : http://www.luckylookonline.com/2012/03/blog-post.html