சென்னை என்பதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. புரியவில்லை. பதட்டமாகவும், குழப்பமாகவும் இருக்கிறது. ஆணிவேரை தொலைத்த மரங்கள் இங்கு பட்டுப் போனபடி நடமாடிக் கொண்டிருக்கின்றன. இது புலம் பெயர்ந்தவரின் நகரம். வந்தேறிகளின் வாழ்விடம். பூர்வக்குடிகளை அடித்துவிரட்டி நூற்றாண்டாகிறது. இந்தியாவிலுள்ள மூன்று பெரிய நகரங்களுள் ஒன்று. தமிழகத்தின் தலைநகரம். இத்யாதி, இத்யாதி என்பதான பிம்பத்தின் பின்னால் கணக்கிலடங்கா இத்யாதிகள் இருக்கின்றன.
மெரினாவும் இருக்கிறது. கூவமும் ஓடுகிறது. அண்ணா சாலையும், ஈஸிஆர் ரோடும், ராஜீவ் காந்தி சாலையும் இருப்பது போலவே பிராட்வேக்களும் நிரம்பி வழிகின்றன. கோடம்பாக்கமும் உண்டு. கொளத்தூரும் உண்டு. போட் கிளப்பும் உண்டு. புளியந் தோப்புகள், கூவம் கரை ஆகியவையும் உண்டு.
உயர் நடுத்தர வர்க்கங்கள் வாழும் அண்ணா நகரும், அடையாரும் இருப்பது போலவே நடுத்தர வர்க்கங்கள் ஒண்டுக் குடித்தனங்களில் மூச்சுத் திணறும் திருவல்லிக்கேணியும், சைதாப்பேட்டையும் உண்டு. அக்ரகாரங்கள் மாம்பலம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, குரோம்பேட்டை ராதாநகரில் செருகப்பட்டுள்ளது போலவே ரவுடிகளும், தாதாக்களும் வாழும் தண்டையார்பேட்டைகளும், புதுப்பேட்டைகளும் செருகப்பட்டுள்ளன. குஜராத்திகளும், மார்வாடிகளும் சவுகார்பேட்டையில் சங்கமமாகியிருப்பது போலவே முகமதியர்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். Continue reading “சென்னை என்பதை எப்படி விளக்குவது”