இந்தியாவில் அரை நூற்றாண்டுக்கு மேலாய் நடைமுறையிலிருக்கும் மக்களாட்சி வடிவத்தில் மக்களுக்கு எதுவும் கிடைத்ததில்லை. அரைத்த மாவையே அரைக்கும் தேர்தல், வாக்களிப்பு, ஆட்சி மாற்றம் என்ற சனநாயக உத்திகளால் வெகுமக்கள் மாவும் பெறவில்லை, தோசையும் பெறவில்லை. பூ, காய், கனி, கிளைகள் என செழுப்பம் தர வேண்டிய மக்களாட்சிச் செடியினை அரிக்கும் வேர்ப்புழு எது என்பதை இக்கட்டுரை பதிவு செய்கிறது.
5.1.2011 அன்று தொலைக்காட்சி செய்திகளை உருட்டிக் கொண்டிருந்தது.
காமன்வெல்த் போட்டிகளில் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்த கல்மாதியின் வீடுகளில், அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை. தொடர்ந்து சி.பி.ஐ அலுவலகத்தில் கல்மாதியிடம் நேரில் விசாரணை
போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் இத்தாலிய தொழிலதிபர் குவத்ரோசிக்கும், இந்தியர் தரகர் வின்சத்தாவுக்கும் ரூ 41 கோடி கமிஷனாக (கையூட்டு) வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பெற்ற 41 கோடி ரூபாய்க்கு வருமான வரி கட்ட வேண்டுமென வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்தது.
முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாயிருந்த கே. ஜி. பாலகிருஷ்ணனின் இளைய சகோதரர், இரு மகன் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாய் சொத்து சேர்த்ததாக கேரள அரசு வழக்கு. இவர்களைப் பினாமிகளாக்கி சொத்துச் சேர்த்த கே. ஜி. பாலகிருஷ்ணன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நீடிக்கக்கூடாது என டில்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
– மூன்று செய்திகளையும் ஒரே நேரத்தில் கக்கிக் கொண்டிருந்தது ஒரு நல்ல தொலைக்காட்சி. பார்த்துக்கொண்டிருந்த அம்மா சொன்னார்.
‘சொத்து சேத்தாங்க, சொத்து சேத்தாங்கன்னு சொல்லிக்கிட்டதானே இருக்காங்க. ஒருத்தன் கிட்டயாவது சொத்தைப் பறிச்சாங்கன்னு இருக்கா? சனங்க பாத்துக்கிட்டும் கேட்டுக்கிட்டும் இருக்கலாம்’’
அண்மையில் வெளியான இதுபோன்ற செய்திகள் சிந்தனைக்குரியவை. அவை குறித்து சாதாரண அந்தப் பெண் சொன்னதும் நம் கவனத்தில் எடுக்க வேண்டியவை. மக்களாட்சி செயல்முறைக்கு வந்த கடந்த 60 ஆண்டுக் காலமாய் வெளியாகும்
செய்திகளின் ஒரு வரலாற்று தொடர்ச்சி இது. நமது ஊழல்கள் பாரம்பரியம் மிக்கவை. இந்தியா பெருமை கொள்ளத் தக்க பாரம்பரியங்களில் இதனை முதலாவது இடத்தில் கொள்ளலாம்.
1958-ல் நேரு, இந்தியப் பிரதமராக இருந்தபோது, அவரது அமைச்சரவையிலிருந்த டி. டி. கிருஷ்ணமாச்சாரியின் முந்த்ரா ஊழல், 1975-ல் இந்திரா காந்தியின் ஆட்சியில் நடைபெற்ற மாருதி கார் -நகர்வலா ஊழல்கள், 1987-ல் ராஜிவ் காந்தியின் போபர்ஸ் பீரங்கி ஊழல், 1989-ல் நரசிம்மராவ் ஆட்சியின் தொலைத்தொடர்புத்துறை, சர்க்கரை இறக்குமதி, பங்குச் சந்தை, ஹவாலா ஊழல்கள், 1994-ல் சர்க்கரை ஊழல், 1996-ல் உர இறக்குமதி, மாட்டுத் தீவன ஊழல், 1997-ல் நிலபேர பங்கு ஊழல், 2002-ல் வீட்டு வர்த்தக ஊழல், 2006-ல் பஞ்சாப் சிட்டி சென்டர் மோசடி, 2008-ல் வருமானவரி ஓய்வூதியக் கொள்ளை, 2010-ல் ஐ. பி. எல் கிரிக்கெட் ஊழல் என்று ஆண்டு தவறினாலும் தவறாத ஊழல், மோசடிகள், கொள்ளைகள் அரங்கேறி வருகின்றன. பருவமழை பொய்த்தாலும் பொய்க்கலாம், ஊழலும் கொள்ளையும் பொய்க்காது என்ற புதுமொழியை சமகால ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆதர்ஷ் குடியிருப்பு, 2-ஜி அலைக்கற்றை மோசடிகள் மெய்ப்பித்துள்ளன. அந்த சாதாரண பெண்மணி கேட்டது போல், எத்தனை நடந்திருந்தாலும், எவரிடமிருந்தும் சொத்து பறிக்கப்பட்டதாகவோ யாரொருவரும் தண்டனை பெற்றதாகவோ இல்லை. ஆட்சி மன்றங்களும், வழக்கு மன்றங்களும் பாதுகாப்புக் கேடயங்களாய் இருக்கின்றன. முன்னாள் தமிழக நிதியமைச்சர் நெடுஞ்செழியன், ‘‘வழக்கு முடிந்து தீர்ப்பு வருமுன்னே நான் இறந்து போய்விடுவேன்’’ என்று சொன்னது போல், பலர் இறந்து போயிருக்கிறார்கள்
மக்களாட்சி அரசியலை எத்திசையில் கொண்டு செல்வது என்ற உயர்ந்த முடிவை எட்ட வேண்டிய தருணமிது.
உலகில் மக்களாட்சி நடைமுறைக்கு வந்தது 1871ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் பின்னரே. பிரெஞ்சுப் புரட்சியின் தொடர்ச்சியாய் உருவான ‘பாரிஸ் கம்யூன்’ இதற்கு ஒரு காரணமாய்-மூல காரணமாய் அமைந்தது. மக்களின் அதிகாரம் (கம்யூன்) நிலை நாட்டப்பட்ட பிரெஞ்சுப் புரட்சியில் ஆலைகள், நிறுவனங்கள் போன்ற முதலாளிகளின் கையிருப்புகளை கைப்பற்றிய மக்கள் அவர்களே நிர்வகிக்கத் தொடங்கினர். எதிர்த்தவர்கள் கொல்லப்பட்டனர், கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். கைவசப்படுத்தியவர்கள் அதைக்கொண்டு செலுத்தும் நிர்வாகத் திறன் பெற்றவர்களாயில்லை. அதில் போதிய பயிற்சி பெற்றவர்களும் அரிதாக இருந்தனர். அதிகாரத்தைக் கையாள்வது, தக்க வைத்துக் கொள்வது தொடர்பாய் அவர்களுக்கு பரிசோதனைக் காலமாக ஆகியது. இந்த இடைவெளியில் ஆளும் வர்க்கத்தினர் மீண்டும் அதிகார பீடத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். பாரிஸ் கம்யூன் என்ற மக்கள் நிர்வாக அமைப்பின் தோல்விக்கு, இது மட்டுமல்ல. மக்களதிகாரம் என்றநெருப்பு தங்களை முழுமையாகச் சூழுமுன் அதிலிருந்து தப்பிக்கும் ஒரு உபாயத்தை பிரித்தானிய ஆளும் வர்க்கம் முன் வைக்கிறது.
‘‘உங்களுக்கு அதிகாரம்தானே வேண்டும். அதைத் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் மூலம் பெறுவீர்கள்’’ Continue reading “ஒன்றரை நூற்றாண்டு மக்களாட்சி உடைப்பும் புதிய மக்களாட்சி உருவாக்கமும்”