டிசம்பர் 25 – 26, 2015 இருதினங்கள் நயாகராவில் குடும்பத்தோடு ஒதுங்கினேன். மகிழ்வாய்ச் சென்ற அந்த தினங்கள் வீடு வந்ததும் கவிதையாய் மலர்ந்தன இப்படி….
*
நயாகரா 2015
*
விடாமல் கொட்டும்
விசுவரூபம்
குளிர் நீர்ச் சிறகுகள்
படபடத்துப் பறக்கும்
ராட்சசப் பறவை
விண்ணைத் தொட்டு
ஏழு வர்ணம் தீட்டும்
தண்ணீர்த் தூரிகை
நெருப்பையும் வெல்லும்
தீரா நீர்ப் புகை
நிலத்தின் மேனியில்
நீர்முத்தம் வரையும்
பருவ ஓவியம்
கவிதை மடியில்
கவிதை எழுதும்
நீரெழுத்துக் கவிதை
காற்றைக் கிழித்து
கரைகள் நிறைத்து
சந்தங்கள் பொழியும்
ஓயாத பாட்டு
துருவப் பனிக் குடங்கள்
துளித் துளியாய் உடைந்து
மில்லியன் கால்கொண்டு நடந்து
பேரரருவியாய் விழுந்து
கடல் சேரும் ஓட்டம்
இது
நீரோட்டமல்ல
ரத்த ஓட்டம்